Monday, May 19, 2008

சிநேகமானவர்களே!

இணைய தமிழ் உறவுகளே வணக்கம்! உங்கள் வரவுக்கு நன்றி!!

பலருக்கு இந்த பணி ஒரு விபத்து. எனக்கோ இது பல வருடத் தவம். வெறும் 60 குடியிருப்புக்களே கொண்ட சிற்றூர் சிவபுரம். நான் மண் விளையாடி மகிழ்ந்த பூமி அது. என் வாழ்வுக்கு இரண்டு தெய்வங்கள் அன்னை பராசக்தி, தந்தை கணேசலிங்கம். மூத்தபிள்ளை என்று என்னை அன்னை யாழ் வைத்தியசாலையில் பெற்றாலும் ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து நடந்து ஊஞ்சலாடி மகிழ்ந்த பூமி என் சிவபுரம். கண்பட்டுவிடாமல் என்னூரை காப்பது சீதளாம்பிகையுடன் வீற்றிருக்கும் சிவபுரநாதர்தான். 30 வருட கொடிய வரலாற்றில் இதுவரை என் ஊர்மக்களை காப்பது எங்களுர் சிவபுரத்தரசன்தான்.

1987 இலங்கை வானொலியின் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பொங்கும் பூங்குழல் நிகழ்ச்சிகளை மீள என் குரலால் ஒலிபெருக்கி காட்டியதால் தாய் மாமா மனதை கவர்ந்து, கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்விபயில வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் ஆசைப்பட்ட திறமைக்குரிய வாய்ப்பு படிக்கும் வரை கிடைக்கிவில்லை. காலச் சுழற்ச்சி பலரைப் போல் எனக்கும் திரைகடல் ஓடி திரவியம் தேடவேண்டிய சூழலை ஏற்படுத்தியது.

1997 London IBC யின் உதயம். புலம் பெயர்ந்த செவிகளுக்கு புதுப்பாலம் அமைத்தது. நெருங்கிய நேயர் என்றாலும் ஏனோ என் மழலை வயதுக் கனவு இங்கும் பலிக்கவில்லை. 2000 ஆண்டில் மீண்டும் ஓர் பெயர்வு, இறுதியாய் கரையேறியது கனடாவில், கனவு பலித்தது! 2001 அலையின் கரங்கள் அழைத்தது. இருக்கும் திறமைகளை எடுத்தியம்பு பக்கம் இருக்கிறோம் நாங்கள், என உற்சாகமூட்டினார் வி.ஆனந் அலையோசையின் அதிபர். 20தில் மீண்டும் பிறப்பு.

மழலைக் கனவுகள் யாவும் மகிழ்வோடு பெயர்ந்த மண்ணின் காற்றுகளில் பரப்பி ஆனந்தம் அடைந்தேன். ஓலிப்பரப்பு துறையில் பல வித்தைகளை விளங்கப்படுத்தியவர் விஜய் ஆனந், செய்திவாசிப்பின் செய்திகளை செவியூடாய் ஊற்றியவர்ளு.பாலச்சந்திரன் ஆரம்பகால நிகழ்வுகளில் பாடல்களுக்கு இடையே கவித்துளிகளைச் சேர்த்து சொல்வது எப்படி? என கற்றுக்கொடுத்தவர் S.சுதன். இப்போது பாரிசில் படலைக்கு படலை உருவாக்கத்தில் பளுவாக இருந்தாலும் அன்று முதல் இன்று வரை அழைத்து கலைத்துறை முன்னேற்றங்களை பாராட்டும் நண்பர்.
கலைச்சேவையின் கடந்த கால அனுபவங்களை பக்குவமாய் எனக்கு மனங்களில் புகுத்தி பல புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்க உதவியவர் மரியாதைக்குரிய சாதாரண மனிதன் பரம் ஞானேஸ்வரன்.

அலையோசை வானொலியில் இணையும் போது சனி அதிகாலை வெறும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே என் நிகழ்ச்சியினை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அரை மணிப்பொழுதில் என் அன்னைக்கு புகழ்பாடும் நிகழ்ச்சியினை வழங்கினேன். உயிரினம் அனைத்தும் அனுமதிகேட்காமல் அன்பு வைத்திருக்கும் ஓர் உயிர் அன்னை. சிறுவயதிலேயே என் தாயை இழந்துவிட்டதால் உண்டான தாக்கம் அந்நிகழ்ச்சியில் நிறைந்திருந்தமையால் அலையோசையின் அன்பு உறவுகள் மனதில் இலகுவாய் இடம் கிடைத்தது. அனைவரும் தங்கள் தாயை நினைத்துப் பார்க்க அந்த அரை மணிப்பொழுது பிடித்துப்போனது.

ஒரு மாத கால இடைவெளியின் பின் 6 மணிநேர வானொலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை அலையோசை தந்தது. மழைத்துளிகள், நிலாமுற்றம், இசையும் கதையும், கவிப்புனல், இசைப்புனல் என புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கினேன்.

சமகால சமூக நிகழ்வுகளை கண்ணுற்று ஓர் இளைஞனின் பேனாமொழிப் பேச்சாக எனது எழுத்தாற்றலை ஊக்குவித்து மன உணர்வுகளை சுதந்திரமாக வெளியிடவும் கண்டு கேட்டு கற்றறிந்த தகவல்களை உரிமையோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய பல்சுவை ஆக்கப்படைப்பாய் உருவானதுதான் மழைத்துளிகள். வானில் இருந்து பொழிகின்ற நீர்த்துளிகள் அல்ல இது, இளைஞனின் பேனா மைத்துளிகள். மழை பொழிந்து ஓய்ந்தபின் மண்மேல் நீர் காய்ந்தாலும் எவ்வாறு மண் அடியில் ஈரம் எஞ்சுகிறதோ அதுபோல் இந் நிகழ்ச்சி ஓய்ந்த பின் மனங்களில் நிகழ்வின் கரு ஆழப்பதியும் என்பதுதான் மழைத்துளிகள் பற்றிய சிறு விளக்கம்.
இசையும் கதையும் பல வானொலிகளில் இடம் பெருகின்ற அதே வகைதான், சிறுகதைகளுக்கிடையே அந்த கதைக்கேற்ற பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி. இசைப்புனல் பாடல்கள் உருவான உருவாக்கப்பட்ட சுவையான வரலாறுகளை கூறும் நிகழ்வாகவும், கவிப்புனல் எனதும் நேய நெஞ்சங்களினதும் கவி ஆர்வத்தை வெளிக் கொண்டுவரும் நிகழ்வாகவும் அமைந்தது. கனடாவில் காலை 7 மணியிலிருந்து 8 மணிவரை ஒலிக்கும் பொங்கும் பூபாளத்தின் மீது காதல் கொண்டு இருந்த காரணத்தால் அலையோசையின் காலைத்தென்றல் நிகழ்ச்சியூடாய் பாடலுக்கு முன் இருவரிக் கவிதை சொல்லி அந்நிகழ்ச்சியை சிறப்பிக்க கூடியதாக இருந்தது.

வானொலிக்கு ஆக்கங்களை எழுதும்போது சோகப்பாடல்களை கேட்டுக்கொண்டே எழுதுகின்ற பழக்கம் எனக்குள் இருக்கின்றது. பொதுவாக தாயின் நினைவுகளை சுமந்த பாடல்களை கேட்டது வழக்கம். மாறாக சோக காதல் பாடல்களை அதிகம் கேட்டால் இனிமையான காதல் படைப்பு ஒன்றை எழுதி முடித்து விடுவேன்.

அழகாய் அமைதியாய் சென்றுகொண்டிந்த அலையோசை வானொலிப் பயணம் தவிர்க்க முடியாத காரணத்தால் தடைப்பட்டது.
ஆனாலும் ஒரு சில நாட்கள் இடைவெளியின் பின் அலையோசையிலும் அதன் நேயர்களின் மீதும் கொண்டிருந்த அன்பினால் கனேடிய மண்ணுக்கு பல அறிவிப்பாளர்களையும், வானொலி நிலைய அதிபர்களையும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் உருவாக்கிய தமிழோசை வானொலியின் அதிபர் சிறிஸ்காந்தா மீண்டும் தழிழோசைக்கு உயிர் கொடுத்தார். அலையோசையில் பணிபுரிந்த அனைவரையும் அரவணைத்து தமிழோசை வானொலியை தொடர்ந்தார்.
ஆவணி 2003 இருந்து இன்றுவரை AM1430 அலைவரிசையூடாகவும் சீரிஓஆர்.(http://www.ctor.ca/) என்ற இணைய முகவரியூடாகவும் வெற்றி நடைபோடும் தமிழோசையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணிபுரிந்துகொண்டிருப்பதில் பெருமையடைகின்றேன்.

வான்பரப்பில் காற்றிலே குரல் தவழ்ந்த காலத்திற்கும் சற்று உயர்வாய் வாழ் பரப்பில் மேடை அறிவிப்பாளராக உங்கள் செவிகளுக்கு அருகில் இருந்து செய்தி சொல்கின்ற புதிய அனுபவத்தை தமிழோசை தந்தது. கடந்த இகை;குயில் நிகழ்ச்சியையும் வடிவமைத்து ஒருங்கிணைத்து இறுதிப்போட்டிக்கு பாடகர்களை அழைத்துச் சென்ற புதிய பணியை தமிழோசை எனக்ளித்து பெருமை சேர்த்துத் தந்தது. ஒரு தரமான மேடை நிகழ்ச்சியை மக்கள் முன் எடுத்துவர எத்தனை பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்ற புதிய அனுபவத்தை பெற்றுக்கொடுத்தது.

அனைவரும் இந்திய மண்ணுக்கு சென்று சந்திக்க விரும்பும் பல கலைஞர்;களை தமிழோசை வானொலி மூலம் கனேடிய மண்ணில் சந்தித்து கலந்துரையாடக்கூடிய வாய்ப்புகள் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மறக்கமுடியாத நிகழ்வுகளாய் எனது கவிக்காதலன் கவிப்பேரரசு வைரமுத்து, ஆச்சி மனோரமா, இயக்குனர் ஷங்கர், பத்மஸ்ரீ S.P.B, பத்பூஷன் K.J.Jesuthas ஆகியோரை தனிப்பட்டமுறையில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தமையைக் கூறலாம்.

நிறையவே எழுதிவிட்டாலும் இன்னமும் நிறையவே இருக்கிறது. இப்பொழுதுதானே ஆரம்பம். தொடர்ந்து இணைந்திருங்கள் ஒரு ஒலிப்பரப்பாளன் குரலாய் உலகமெங்கும் வலம் வரும் இணையத்தை உங்கள் உறவுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்கள் வசம் இருக்கும் ஆக்கபூர்வமான படைப்புகளை எமக்கு அனுப்பி வையுங்கள் அனைவரும் இணைந்து பயணிப்போம். இனிவரும் காலம் இளைஞர்கள் காலமாய் அமையட்டும்.

ஓய்ந்து போயிருந்த என் பேனாக்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து தொடர்ந்து எழுத ஆரம்பித்து வைத்த எனது வலைப்பின்னல் வடிவமைப்பாள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இதுவரை காலமும் இனிவரும் காலமும் ஆக்கப+ர்வமான கருத்துக்களை, விமர்சனங்களை, பாராட்டுக்களை தந்து ஊக்கப்படுத்திய உறவுகள் உங்கள் அனைவருக்கும் எனது இதய நன்றிகள்.
புலரும் புத்தாண்டு புனிதமாகட்டும்
அல்லலுறும் எம் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியுண்டாகட்டும்
என்றும் சிநேகமுடன்
உங்கள் சிநேகிதன்
கஜன் கணேசலிங்கம்
Jan 01, 2008 www.snehithan.com