Saturday, February 14, 2009

உக்காமல் இருக்கிறது உன் ஞாபகங்கள்


காலம் பல கடந்து கரைந்துவிட்டன
கரையினில் ஒதுங்கிய சருகுகளாய் -இன்னமும்
உக்காமல் இருக்கிறது உன் ஞாபகங்கள்

நாங்கள் சந்தித்த 102 கொட்டாஞ்சேனை பேருந்தும்
நடந்து திரிந்த வெள்ளவத்தை "பீச்" மணலும்
வயதாகி வழிமாறி உருக்குலைந்த உடலானாலும்
பார்கும்போது நம் ஞாபகங்களை மீட்டுகிறதாம்
இப்போதும் கொழும்பில் இருக்கும் நண்பன் சொல்கிறான்

ஐரோப்பாவின் இதயத்தில் நீ இருக்கிறாய்
ரொரன்டோவில் இருந்து என்குரல்
கடல்தாண்டி உன் செவிகளில் விழும்
என்பதில் நம்பிக்கையில்லை -இருந்தாலும்
மடியில் இருக்கும் உன் இரண்டாம் குழந்தையையும்,
நடைபழகி தரையில் தடக்கி விழுந்து அழும்
உன் முதல் குழந்தையும் முத்தமிட்டபடி ஓரு கணம்
நினைப்பாயா..? இன்றைய நாளை...!
இன்றைய நாள் எங்களுக்கானதல்ல
எங்களுக்கானவர்களுக்கானது..!!!
எங்கள் தோல்வி அவர்களுக்கு வெற்றி

"இங்கே! விடிய எழும்பி இவ்வளவு நேரம்
என்ன செய்கிறீங்க.., ..இவனை ஒருக்கா பிடியுங்க"
இப்போது, என் மடியிலும் மகன்
எழுதும் பேனாவை பறிக்கிறான்...
எழுதுவதற்கா..? எறிவதற்கா..?
"ம்" எழுவதற்காகத்தான்.. இனியென்ன
நான் முடிக்கிறேன் அவனே தொடர்வான்..!

No comments: