Saturday, September 27, 2008

யாரடா அவள் ?

இனியவளே!.
நலம், நாடலும் அஃதே.
உன் வரவை எதிர்பார்த்தபடியே
வானில் மேகக்கூட்டங்களுக்கு இடையே
தெரிந்த நட்சத்திரங்களை ஜன்னலின் வழியே
எண்ணிக்கொண்டிருந்த வேளை.. ..
காலை சில நிமிடங்களுக்கு
முன்தான் மொட்டுடைத்த
பூக்களோடு வருகிறான் பூக்காரன்.

வாடியதை எடுத்து கூடையிலே போட்டுவிட்டு
விற்பனைக்காய் பல வண்ணங்களோடு
வாசனைகளையும் விட்டுச் செல்கிறான்.

உறங்கிய கண்கள் உயிர்த்தன மெல்ல
அப்போதுதான் ஜனித்த ரோஜாக்கூட்டம்
கண்களைப் பறித்தன –அதிலொன்றை
சிவப்பாய் உனக்கென்றே வாங்குகிறேன்.

சூடிக்கொள்ள…. அருகில் நீ இல்லாததினால்
தலையணைக்குச் சூடி அதனோடு உறங்குகிறேன்
விழித்துப் பார்க்கையில்.. ..என் தலையைக் கோதியபடி
உன்னைத் திட்டுகிறது ரோஜா !

யாரடா அவள் ?
உன்னைத் தனியே
விட்டுவிட்டுநெடு
தூரத்தில் இருப்பவள் யாரடா..?
துரதிட்டக்காரி…!!

ஏய் ரோஜா..! போதும் நிறுத்து !!
சில மணிநேரம் மட்டுமே
என்னுடன் உறங்கிய நீ -விரைவில்
உதிர்ந்துவிடப்போகிறாய் ஏக்கத்தில்
என்னவளை ஏளனமாய்ப் பேசாதே.. !!

உயிருள்ள காலம்வரை என்னுடன்
உறங்கிவிட உரிமை கொண்டவள்
அவள்தான் என்றோ.. ?? -இறைவன்
சில மாதங்களுக்கு மட்டும்
பிரிவைத் தந்தான்.பிரிவினால்
எனது வெற்று உடல் எங்கும்
அவள்தான் நிறைந்துள்ளாள் காண்..!

வருவாள் விரைவில் என் மடிக்கு
அவள் வந்ததும்உனக்கிடமில்லை
என் வாசல் படிக்கு..!
அவள் சூடத்தான் உன்னை வாங்கினேன்
இனியும் வேண்டாம் தூரப்போ.. -நீ
பொறாமைக்காரி !!

ரோஜாதான் அவளும் எனக்கு
உங்களில் இல்லாத வண்ணமும் வாசமும்
அவள் தருவாள் என்று விரட்டினேன் ரோஜாவை.

எந்தப் பூவும் எமக்கு வேண்டாம்
பூவே! உனக்கு பூ எதற்கு?
வாடி என் அருகில் ஓடி,
உன்னைத் தேடி -நானும்
முடிக்கிறேன்பதில் கண்டு
தொடர்கிறேன்

- எதிர்பார்போடு காக்கும் காதலன் ..!

No comments: